யாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.


ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.
நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.
தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.
கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.
நேற்று ஹர்த்தால். ஒண்டும் செய்யேலாம போயிற்றுது. உங்களுக்காக இந்த லேற்றஸ்ற் கைப்பேசின்ர படத்தை தந்திருக்கிறன். பாருங்கோவன்

யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.

2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.
ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் சிறிதளவு காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு தீவிரமான ஓட்டம் ஆத்மாநாமின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.
சில ஆத்மாநாமின் வரிகளை பாருங்கள்.
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
பாட்டாளி மக்களுக்கான இந்தவரிகளும் யோசிக்க வைக்கிறது
இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு
மற்றவர்களுக்காய் பாடுபடும் ஒருவனாக அனேக கவிதைகளில் ஆத்மாநாம் காணப்படுகிறார்.
பழக்கம் எனும் இந்தக் கவிதையில் வரும் வரிகள் ஆத்மாநாமை நன்கு வெளிப்படுத்துகின்றன.
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
ஆத்மாநாம் தன்னைப்பற்றிய சிறு கட்டுரையும் இத்தொகுப்பில் காணப்படுகின்றது.