Archive for கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 17-20

நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்
கற்பங் கடக்குங் கதிரையே – வெற்பரிந்தோன்
தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை (18)

வெற்பு அரிந்தோன் – மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த – மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை – பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் – நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே – தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் – திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே – தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.

மாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே – சேலேவை
மாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ
மாமடுவை வேலை மலை. (19)

சேல் ஏவை மாமடுவை வேலை மலை – சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் – மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை – மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்திய தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு – மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே – சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் – அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே – ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.

துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே – செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு (20)

கண்டு அடக்குஞ் செப்புமொழி – கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி – அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் – இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் – எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு – உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை – பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை – கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.

21 கார்த்திகை, 2006

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக

மேன்மைமிகு
மேன்மை மிகு தேசமே
இருள் மிகுந்த பெருந்துயர் இரவில்
திரிகைக்கல் சுழலலாம்
மேலும் சுழலலாம்
ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு
அவற்றால் இயலா
அவை மிகச் சிறியன.

ஓ பெரிய தேசமே
ஓ ஆழமான காயமே
தனிப்பெரும் காதலே
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து
ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து
திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து
சிதைவுகளிலிருந்து
சித்திரவதைகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.

அது எழவே செய்யும்.

21 கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 16,17

பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்
கற்பு மலருங் கதிரையே – வெற்புடனே
மாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச
மாமூல வேரறுப்பான் வைப்பு (16)

வெற்புடனே – மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து – அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த – தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் – உயிர்களது வஞ்சனை மிக்க இருண்மலத்தின் மூலமாகிய அவாவை அறுக்கும் முருகக் கடவுளது, வைப்பு – ஊர், சொற்புலவர் தூக்கினில் – சொல்வன்மையுள்ள புலரவர்களது செய்யுள்களில், கற்பு மலரும் கதிரையே – கற்பனை நயங்கள் விரிந்த பல பொருட்களை காட்டும் கதிரைப்பதியேயாகும், தூயமலர்ச்சோலையில் – தூய்மைவாய்ந்த பூஞ்சோலைகளில், கற்பு மலருங் கதிரையே – முல்லைக்கொடிகள் மலருங் கதிரைப்பதியேயாகும்.

நல்லார் மதிமுகத்து நாடு முலைமுகத்துங்
கல்லாரம் பூக்குங் கதிரையே – மல்லாடி
வந்தே விடுந்தேரான் மாயவடி வேற்பணித்த
வந்தே விடுந்தேரான் வாழ்வு. (17)

மல்லாடி வந்து ஏ விடுந்தேரான் மாய – போராடி எதிர்வந்து அம்புகளைத் தொடுத்த பகைவனாகிய சூரன் அழியுமாறு, வடிவேல் பணித்த – கூரிய வேலை ஏவிய, வந்து ஏவிடுந்தேரான் – வாயுதேவன் செலுத்திய தேரையிவர்ந்த முருகக்கடவுளின், வாழ்வு – கோயில், நல்லார் மதிமுகத்து – பெண்களது சந்திரன் போன்ற முகத்தில், கல்லாரம் பூக்குங் கதிரையே – குவளை மலர்கள் பூக்குங் கதிரைப்பதியேயாகும், நாடும் முலைமுகத்து – விரும்பப்படும் தனங்களின் மேல், கல் ஆரம் பூக்குங் கதிரையே – இரத்தினமாலை பொலியுங் கதிரைப்பதியேயாகும்.

20 கார்த்திகை, 2006