Archives for: November 2007
Why I love Gmail 0 comments

நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.

ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். இருந்தாலும் கொஞ்சக்காலம் போக கொஞ்சம் கொஞ்சமா ஜிமெயிலுக்கு அடிமையாகியாச்சு. இப்ப பொதுவா எனக்கு ஜிமெயிலில என்ன பிடிச்சிருக்கெண்டு பாப்பம்.

அரட்டை
இந்த அரட்டை வசதி இப்ப யாகூ இலயும் இருந்தாலும் அது பெரும்பாலும் ஒருவராலும் பயன்படுத்த படுவதில்லை என்பதுதான் உண்மை.

இந்த அரட்டையில மிகமுக்கியமான பயன் என்னெண்டா அரட்டைகளை சேமித்து வைக்கிறது. விருப்பமில்லையெண்டா விடலாம். அதுக்கும் வசதி இருக்குது.

POP3
எனக்கு மிகவும் பயன்படுற ஜிமெயிலின்ர வசதி இதுதான். இந்த வசதி இருக்கிறதால ஜிமெயில் இப்ப என்ர மின்னஞ்சல் Client ஆக பயன்படுகிறது என்கிறதுதான் உண்மை. அத்தோட வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பெறப்படுகின்ற மின்னஞ்சல்கள் வேறு வேறு Label கள் மூலம் வேறுபடுத்தப்பட்டிருத்தலும் இதன் சிறப்பம்சமாகும். இதன்மூலம் Spam உம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.


அத்தோட இவ்வாறு மின்னஞ்சல்களை ஒன்றா இணைக்கிறதால மின்னஞ்சல்கள் அனுப்பும் போதும் எங்களுக்கு விரும்பிய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பும் வசதியும் இதில் இருக்கின்றது.

Labels
மற்றைய மின்னஞ்சல் வழங்குநர்களின் Folders என்பதற்கு மாற்றீடாக கூகிள் அறிமுகப்படுத்தியதுதான் இந்த Label. பலர் Label இனை விட folder மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த இலகுவானதாக இருப்பதாக கூறினாலும் என்னை பொறுத்தவரையில் Label சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றேன்.

ஜிமெயிலில் இருக்கின்ற எனக்கு மிகவும் பயன்படுகின்ற மற்றுமொருவிடயம், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஒரே மின்னஞ்சலுள் சேமிக்கப்படல். இதில் இன்னமும் முக்கியமானவிடயம் என்னவெனில் இந்த மின்னஞ்சல் கலந்துரையாடலில் பலர் கலந்துகொண்டால் ஒவ்வொருவர் பெயரும் வெவ்வேறு நிறங்களில்; இலகுவாக பிரித்தறியக்கூடியவாறாக அமைந்திருத்தல். எனது அலுவலகம் சார் மின்னஞ்சல்களின்போது இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

பிழைதிருத்தம்
இந்த பிழைதிருத்த வசதி அனேகமான மின்னஞ்சல் சேவைகளில் இருந்தாலும் ஜிமெயிலின் பிழைதிருத்தியை பயன்படுத்தியவர்கள் அதன் இலகுத்தன்மையில் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.

கீழே குறிப்பிடுகின்ற இரண்டு வசதிகளும் கூகிளின் அனைத்து சேவைகளுக்கும் பொதுவானதாயினும் இந்த வசதிகளும் மிகவும் பயனுள்ள வசதிகளே. இவற்றை திரைவெட்டுகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


கடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க.
ஏன் இது இன்னமும் அங்க இருக்கு???

Read More..
ஐபோன் உச்சத்தில்… 0 comments

2007ம் ஆண்டிற்கான “PC Magazine” சர்வேயில் 10 இற்கு 9.1 புள்ளிகள் பெற்று ஐபோன் (iPhone) முதலிடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு வகையினை சார்ந்த கைப்பேசியும் கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படியான ஒரு புள்ளியினை பெற்றிருக்கவில்லை. ஐபோன் குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த பாட்டு மற்றும் வீடியோ வசதிகளுக்கு 9.6 புள்ளிகளையும், பேச்சு தெளிவிற்கு 8.2 புள்ளியும் (இது சராசரியை விட அதிகமாகும்), கவரேஜ் இற்கு 8.2 புள்ளியும் பெற்றுள்ளது. பொதுவாக இந்த சர்வேயில் பங்குபற்றியவர்கள் அனைவரும் இந்த கைப்பேசியை தாங்கள் காதலிப்பதாகவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More..
காரத்திகைத்தீபம் – யாழ்ப்பாணம். 0 comments

இண்டைக்கு கார்த்திகைத்தீபம். வழமையா யாழ்ப்பாணமே வெளிச்சக்காடாகிற ஒரு நிகழ்வு கார்த்திகைத்தீபம்தான். வழமையா வருசம் நிறைய வாற விசேடங்களுக்குள்ளேயே இண்டைவரைக்கும் எனக்கு பிடிச்சது கார்த்திகைதீபம்தான். ஏனென்ண்டா அண்டைக்குத்தான் இரவில வெளியால திரியலாம். வழமையான இரவு ஏழு மணிக்கு முதல் வீட்டுக்க வரவேணும் எண்டா அண்டைக்கு மட்டும் ஒம்பது மணி வரைக்கும் வரத்தேவையில்லை. (2002 வரைக்கும் கூடப்படிக்கிற பொம்பிளைப்பிள்ளையள் வீடுகளுக்கு எல்லாம் கூட்டமாய் போய் எங்கட வீர சாகசங்களை காட்டுறது, சில பிரச்சனை தந்த வாத்தியார் வீட்டு தீபத்துக்குள்ள உப்புபோடுறது வரைக்கும் செய்தனாங்கள், 2003க்கு பிறகு இந்த விளையாட்டுகள் ஒண்டும் இல்லை. – என்ன மாயா ஞாபகம் இருக்குதோ???) ஆனா கடைசியா 2005 இல யாழ்ப்பாணத்தை மோட்டச்சைக்கிளில ஒரு சுத்து சுத்தினதுதான் அதுக்கு பிறகு ஒண்டும் இல்லை.

2006 இல சரியான பிரச்சனை. பெரிசா ஒரு சனமும் தீபம் ஏத்தேல்ல. அத்தோட பஞ்சாங்க குழப்பம் வேற. கார்த்திகை தீபம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட பிரச்சனையிலயே கொஞ்ச இடத்தை முதல்நாளும் வேற கொஞ்ச இடத்தை அடுத்தநாளும் தீபம் ஏத்துப்பட்டுது. அனேகமா எல்லாரும் வீட்டு படலைக்குள்ளயே தீபம் வச்சு ஏத்தினதில பெரிசா வீதிகள் ஒண்டும் களைகட்டேல்ல. இருந்தாலும் கோயில்களில பூசைகள் நடந்தது.

இந்தவருசம் பஞ்சாங்க குழப்பம் ஒண்டும் இல்லை. 9 மணிக்கு ஊரடங்கு எண்டாலும் 7 மணிக்கு பிறகு றோட்டில ஆக்கள் காணுறது கஸ்டம். ஒரு நாலுபேரா சேந்து ஒரு சுத்து சுத்துவம் எண்டு வெளிக்கிட்டு சுத்தி பாத்தம் (ஆறேகாலுக்கு வீட்ட திரும்பி வந்திட்டம்). சனம் ஐஞ்சு மணிக்கே ஏத்த ரெடி. வழமையா ரோட்டு நீட்டுக்கு பாக்க வடிவா இருக்கும். இந்த முறை அங்கயொண்டு இங்கயொண்டு எண்டு எரிஞ்சுது. டக்கெண்டு எத்தனை இருக்கு எண்டு எண்ணி சொல்லிப்போடலாம் எண்டளவுக்கு இருந்துது. பிறவுண்றோட், கஸ்தூரியார் றோட், கேகேஸ் றோட், அரசடி றோட் எல்லா றோட்டும் நீட்டுக்கு போய் பாத்தன். ஒரு நல்ல படம் எடுப்பம் எண்டு பாத்தா சரிவரவே இல்ல. கடைசியா கோயிலடியில வந்து எடுத்தபடம் கீழ. (கறண்ட் இல்லாததில படம் நல்லா இல்ல – இப்ப இரவில கொஞ்ச நேரம் கறண்டும் இல்ல)

Read More..
குறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா 0 comments

இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து தங்கியிருந்த காலம் வரைக்கும் புத்தகத்திலதான் காசு கூடும். “இண்டைக்கு ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போயிராதயுங்கோ பாருங்கோ சனிபோல வாருங்கோ”, இது ரவி அண்ணை. வந்ததுக்கு ஒண்டெண்டான்ன வேணும் எண்டு சொல்லி அ. யேசுராசாவோட குறிப்பேட்டிலிருந்து… புத்தகத்தை வாங்கி கொண்டு வந்து ஒரே மூச்சில வாசிச்சாது.

அலை வெளியீட்டில வைகாசி 2007 இல வெளிவந்திருக்கு. 2003 இல வந்த அவற்ற பதிவுகள் மாதிரிதான், இருந்தாலும் பதிவுகள் “அலை” சஞ்சிகையில வந்தது (பிறகு அலை பத்மநாப ஐயரோட முயற்சியால தொகுப்பாயும் வெளிவந்தது) ஆனா இது நீண்ட காலப்பரப்பை உள்ளடக்கிறதால அக்காலத்தாக்கங்கள் முதிர்வுகளின் வெளிப்பாடுகள் அப்பிடியே தெரியுது, 1970 இல எழுதின “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” தொடக்கம் 2006 இறுதியில எழுதின “மனிதனாயிருந்த மனிதன்” ஏ.ஜே பற்றிய நினைவுக்குறிப்புகள் வரைக்கும் இருக்குது. இது ஒரு விமர்சகனோட குறிப்புகளாய் இருக்கிறதால இதில இருக்கிற குறிப்புகள் பற்றி எதுவுமே நான் சொல்லுறதுக்கில்ல. ஆனா நீங்களே அவரோட என்னுரைய கீழ வாசிச்சு பாருங்கோ.


‘………..தேவையற்று போய்விட்ட மதுபானக் கடையைப்போல இப்போ கலை இலக்கியக் ‘கடை” களும் எனக்கு தேவைற்றுத் தெரிந்தன……….” – மு. தளையசிங்கம்.

மு. த. வின் ‘பக்குவம்” என்னிடமில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது நினைவுக்கோப்பை கசப்பில் நிரம்பி வழிகின்றது.

எமது கலை, இலக்கிய வாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்”? பட்டம், பணம், பதவி – பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த முயல்கின்றனர்!

கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலமிக்க தந்திரச்செயல்களுடன் – ராஜ கம்பீரராய் பெருமைகாட்டி பவனி வருகின்றனர். அதிசய ஆடை ‘அணிந்த” அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மில் பலர் ஏனில்லை?

நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றிடையே இடைவெளியில்லாத-
இயன்றவரை நேர்மையான வாழ்வை கொண்டிருக்க வேண்டுமென்ற-

அறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.

இந்நிலையில் இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற எழுத்தாளனை ‘சர்வாதிகாரி – கிட்லர்” எனச்சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்” ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.

மு.த. , ஏ.ஜே , போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக் காரரே எமக்குத் தேவை. புகழ், பணம், பதவி என்று அந்தரப்படாது தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வு கொண்ட அத்தகையோரை காண்பது அரிதாகவே உள்ளது.

‘ஒரு வாசகனின் அபிப்பிராயம்!” எனது முதற் கட்டுரையாகும். கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனாயிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கலாநிதி. கா. கைலாசபதியின் ‘சமர்” இதழ் கட்டுரையொன்றிற்கு பதிலாக எழுதப்பட்டதே ‘குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை!”. ஆனால் இக்கட்டுரையை வெளியிட சமர் ஆசிரியரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.

தெல்லிப்பழை கலை இலக்கிய களம் ஒழுங்கு செய்த சிறுகதை நாள் நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ‘ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும்” என்ற தலைப்பினைத்தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றை படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.

மாணவர் – இளைஞர்களுக்கான சாளரம் இதழில் அறிமுகக் கட்டுரையாக எழுதப்பட்டதே, சி. வி. வேலுப்பிள்ளையின் ‘தேயிலைத் தோட்டத்திலே….”

இறுதியாயுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகையில், பத்திரிகைத்தேவையும் பொருத்தமும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.

எல்லாக்கட்டுரைகளும் ஏற்கனவே பிரசுரமாகியுள்ள போதும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.

அ. யேசுராசா அவர்களின் முகவரி
இல 1, ஓடைக்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

Read More..
கூகிளுடன் AIM 0 comments

கூகிள் நிறுவனம் ஜிரோக் இனை தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலுடன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து பெரியளவிலான எந்த விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் AOL நிறுவனத்தில் கூகிள் ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்ததிலிருந்து ஜிரோக் இன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இப்போது அனேகமாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கூகிள் நிறுவனம் AIM இனை தனது அரட்டை சேவையுடன் இணைக்கப்போகின்றது.

இதைவிட இரண்டு சுவாரசியமான இரண்டு தகவல்கள் என்னவென்றால் அப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதள ஐசற் ஜிரோக் உடன் சிறப்பாக ஒத்துழைப்பதும், கூகிள் மிக அண்மையில் ஸ்கைப் (இப்போது ஈபே நிறுவனத்தின் ஒரு பிரிவு) உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டதுமாகும்.

கீழிருக்கும் திரைவெட்டை பாருங்கள்.

(யாழப்பாணத்தில் இருக்கும் மிக மோசமான இணையப்பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக பதிவை மேம்படுத்த முடியவில்லை.)

Read More..