தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. கலந்துரையாடல்களுக்கான அறிமுக உரைகள் சிறியதாய் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது.
லோசன் அண்ணா – ஒரு உதாரணத்திற்காகத்தான் உங்கள் பதிவினை கிரிக்கெட் பதிவாக குறிப்பிட்டேன், உங்கள் பதிவை பற்றி நான் சொல்லித்தான் மற்றவர்கள் அறியவேண்டும் என்பது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதே போல வந்தியத்தேவன் உங்கள் பதிவில் தான் நான் அனேகம் பின்னூட்டங்களை வாசிக்க நேரத்தை செலவழிப்பதுண்டு. அதன் அர்த்தம் பதிவு நன்றாக இருக்காது என்பதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கீர்த்தி உங்கள் பேச்சைப்போலவே பயற்றம் பணியாரமும் நன்றாக இருந்தது. நன்றிகள்.
கீழே சில புகைப்படங்கள்..
அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது.
கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள்.












தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஊரோடியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஊரோடி பகீ.
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகே எனக்கு இதனை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால் வந்தியத்தேவன் எல்லோரும் நிச்சயம் எழுதுங்கள் என்று கேட்டதானால் இந்த பதிவு. இலவச இணையத்தளம் தொடர்பாக அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டவுடனே கௌபாய் மதுவிடம் இதனை இணைய ஒளிபரப்பு செய்தால் என்னாலும் பங்குகொள்ள முடியும் என்று கேட்டிருந்தேன். உடனே அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து இணையத்தில் ஒளிபரப்பு செய்திருந்தார். என்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நேரடியாக கலந்து கொள்ள முடிந்ததானால் அதனை பயன்படுத்த முடியவில்லை, ஆனால் வெளிநாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்ள அது ஏதுவாக அமைந்தது. (நன்றி மது)
மதுவின் மடிக்கணினி சிறிது நேரம் என்னிடம் இருந்ததனால் பலருடன் அரட்டையடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இலங்கையின் அவுஸ்திரேலியாவின் முதலாவது பதிவர் சந்திப்புகள் போன்ற பல்வேறு அரிய விடயங்களை கானா பிரபா மற்றும் சயந்தனிடம் இருந்து அறிய முடிந்தது. பலருக்கு அரட்டையூடாக பதிலளிக்க முடியாது போனதுக்கு வருந்துகின்றேன். ஆனால் மடிக்கணினியை சுழற்றியே அனைவரையும் படம்பிடிக்க வேண்டிய தேவை இருந்ததனாலேயே இந்த தவறு ஏற்பட்டிருந்தது. இன்னுமொரு தடைவை வாய்ப்புக்கிடைத்தால் சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கின்றேன்.
வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக நடைபெற்றது எனக்கு சிறிதளவு வருத்தமே. என்னைப்பொறுத்தவரை நான் ஒரு நண்பர்கள் சந்திப்பை எதிர்பார்த்தே சென்றேன். அதன்மூலம் புதிய பல பதிவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது. இருப்பினும் புதிய பதிவர்களுக்கு பயனுள்ள பல விடயங்களோடு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது வரவேற்கத்தக்கது.
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.

ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் எங்கள் மீது இற்க்கிவிடும் அவர்களின் துயரங்களினையும் துக்கங்களினையும் தாங்கவேண்டடியவர்களாயும் இந்த நான்குமாதங்களும் கடந்து போயிருக்கிறது. இன்னமும் இது தொடர்ந்தாலும், பழகிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. (எங்களுக்கு எல்லாமே பழகிப்போயிருக்கிறது)
இப்போது ஊரோடியில் திரும்பவும் ஏதாவது அலட்டுவது என்று முடிவுடன் திரும்பி வந்திருக்கின்றேன். நிச்சயமாக கடந்து போன மாதங்கள் பற்றியதாக அது இருக்காது. எப்போதாவது சாத்தியப்படும் என்ற நிலை வரும்போது அவைபற்றி நிச்சயம் எழுதுவேன்.
பதிவர் சந்திப்புக்காய் ஏ-9 வீதியால் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை நிச்சயம் ஒரு நாள் தரவேற்றுவது என்ற யோசனையும் இருக்கின்றது. பாரப்போம். இடையிலே தடைப்பட்டிருந்த எனது இணையத்தூடான வேலையையும் இப்போது தொடரத்தொடங்கியிருக்கின்றேன். இப்போது மீளவும் அதிகம் வாசிக்க முடிகிறது. நல்ல புத்தகங்கள் கிடைப்பதுதான் அரிதாகி இருக்கிறது. (நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் – யாழ்ப்பாணத்தில் கிடைக்கவும் வேண்டும்.) பார்ப்போம்.
யாழ்ப்பாணம்.
பொருட்களின் விலை குறைந்திருக்கிறது, யாழப்பாண உற்பத்திகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதிவேக இணையம் வந்திருக்கிறது அத்தோடு வீதிக்கு வீதி நெற்கவேக்களுமாக. யாழ்ப்பாணத்துக்குள் அதிகம் இறக்குமதியாவது மதுபானம்தான் – அரச அதிபரின் கூற்று. தேர்தல் ஒன்று வந்துபோயிருக்கிறது யாருக்கும் தெரியாமல். யாழ்ப்பாணத்தை பற்றி தொடர்ந்து அதிகம் அலட்ட முயற்சிக்கிறேன்.
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஊரோடி.