Category: இலக்கியம்
அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் 5 comments

இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,

அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.

ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.

என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.

இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம். செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.

விகுதி.

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.

என்று நன்னூல் விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.

இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.

இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.

இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.

இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது.

வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் “னவ்வீறு” சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.

வடிகட்டி எனும்போது அங்கு சேரும் “இ” விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு “இ” விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.

அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.

Read More..
பெயல் மணக்கும் பொழுது – ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள். 2 comments

மிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.




தொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது.

அதில் அவர்…

மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது.

இவரின் பெண்கவிஞர்களின் கவிதைக்கான தேடல் இவர் குறிப்பிடும் கவிதைத்தொகுப்புகளிலிருந்தே தெரியவருகின்றது.

1986 சொல்லாத சேதிகள் தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் பயணம், மறையாத மறுபாதி, உயிர்வெளி, வெளிப்படுத்தல், எழுதாத என் கவிதை என்று கடந்த இருபது ஆண்டு காலமாக விரிவடைந்துள்ளது. சிவரமணி கவிதைகள் தொகுக்கப்பட்ட பின்னர், செல்வி-சிவரமணி கவிதைகள், ஒளவையின் எல்லைகடத்தல், ஆழியாளின் உரக்கப்பேசு, துவிதம், சுல்பிகாவின் உயிர்த்திருத்தல், மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள், பெண்ணியாவின் என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை, நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம், உயிர்த் தீ, லுணுகலை ஹஸீனா புஹாரின் மண்ணிழந்த வேர்கள், மேஜர் பாரதியின் காதோடு சொல்லிவிடு அகிய தொகுதிகள் என் பார்வைக்கு கிட்டின. எனக்கு இன்னும் கிட்டாத பாலரஞ்சினி சர்மாவின் மனசின் பிடிக்குள், கோசல்யா கவிதைகள், அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் ஒரு வசந்தம், அனாரின் கவிதைத்தொகுதி என்று பட்டியல் நீள்கின்றது.

மேலும் இவர் தொகுப்பு தொடர்பாய் சொல்லும்போது.

இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கின்றேன். இன்னும் பலரை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒருசேர இருப்பது குறித்து அக்கவிஞர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். வௌ;வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால்
தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைத் தொகுதி என்ற வகையில் அனைத்து தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது.

இத்தொகுப்பிலே, 92 பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. வழமையாக எந்த ஒரு கவிதைத்தொகுப்பையும் வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் இந்த கவிதைத்தொகுப்பை வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். கவிதைக்கு கவிதை மாறுபடும் அரசியல் சார்பு மற்றும் சிந்தனைகள் எங்கள் (வாசகர்களின்) அரசியல் சார்புகள் மற்றும் சிந்தனைகளோடு மாறிமாறி முரண்படுகிறது, சார்பாகின்றது. வாசித்து முடியும் போது மீண்டும் பூச்சியப்புள்ளியிலேயே கொண்டு வந்து நிறுத்துகின்றது.

ஆதலினால் தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த தொகுதியெங்கும் நர்த்தனமாடும் அரசியல் சார்பும் சிந்தனையும் புதிதாகையால் அல்லது கேள்வி ஞானமேயாகையால் இத்தொகுப்பு அவர்கள் மீது எந்தவித சிந்தனா மாற்றத்தையும் அல்லது எண்ணத்தையும் கொண்டுவரும் என எண்ண முடியாது.

இனி தொகுக்கப்பெற்றிருக்கும் கவிதைகளிலிருந்து சில வரிகள்

அ. காந்தாவின் எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த

…..எந்த மகனுக்காய்
என் கால்களை நகர்த்த?
நேற்று விதையுண்டு போன
மூத்தவனுக்கா? – இல்லை
இப்போதுதான்
விதைக்கப்பட்ட என்
இளைய குஞ்சுக்கா?…

சிவரமணியின் யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

நளாயினி தாமரைச்செல்வனின் புதிதாய் பிறந்து விட்டு போகின்றேன்.

….போதும்
நீ என் மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்

போனால் போகிறது
நான் உன் மீது
கொண்ட காதலை புதைத்து
மீண்டும் புதிதாய்
பிறந்து விட்டு போகின்றேன்.

கப்டன் வானதியின் எழுதாத கவிதை….

…..சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என்உடல்
சின்னாபின்னப்பட்டு போகலாம்.
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்……

நாதினியின் எழுதாத உன் கவிதை

“எழுதாத என் கவியை
எழுதங்களேன்”
எனும் என் கவிதை
எழுதப்பட்டு விட்டது

உப்பு வெளியில்
உருகிய உங்கள்
உடல்கள் மீது
எமது வீரர்கள்
எழுதாத உன் கவியை
எழுதி விட்டார்கள்……

நாமகளின் யதார்த்தம்

….அம்புலன்ஸ் வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்,
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
ஷெல் துண்டுகள்…
அவ்வளவுதான்……

ஜெ. நிரோசாவின் இயேசுவுக்கு ஒரு மடல்

…..நான் சொல்லுவது என்னவென்றால்
நீர் மீண்டும் இவ்வுலகம் வரவேண்டும்
இன்னொரு தடவை
இவ்வுலகை மீட்க வேண்டும்….

….ஆ…..
முக்கியமானதை மறந்துவிட்டேன்
வரும்போது
அடையாள அட்டையை
மறந்து விடாதீர்..

பாமதியின் யுத்தத்தால் தொலைந்தோம்

….ஆயிரக்கண்க்கான
இந்த சமாதிகளிடமா
எமது விடுதலையை கொண்டாட முடியும்.

விட்டுவையுங்கள்
யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்
யுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணைப்பற்றி
எழுத குருதி நிரம்பிய பேனாவையும்
மனித நேயத்தையும்
உணர்த்த விட்டுவையுங்கள்.

மேஜர் பாரதியின் அன்பான அம்மா

…..அன்பான அம்மாவே!
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கின்றேன்
அதனிலும் பார்க்க
நான் ஓடி விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
நான் கால் பதித்த
ஒற்றையடிப் பாதைகளை,
செம்பாட்டு மண்படிந்த
என் தெருக்களை,
சணல் பூத்து குலுங்கும்
என் தேசத்தை,
தோட்டவெளிகளை………

சித்திரலேகா மௌனகுருவினதும், வ. கீதாவினதும் பின்னுரைகள் கவிதைகள் தொடர்பாய் மேலும் விளக்கமாய் சொல்கிறது.

வெளியீடு : மாற்று.

Read More..
இன்றைய தமிழ்க் கவிதைகள். 2 comments

மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.

கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).

மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்

I have faced two major challenges in translating poetry. One in to bridge the culture gap betwwn the source language and the target language, perticularly between tamil and a non-indian language like English. The more daunting challenge is to recreate the emotional vibration and the rhythm of the original.

இந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.

மேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்

I found no sovereign formula for sucees here. There is no substitute for a constant search marked by honestly, judgement and sensitivity. I adobted as a guiding principle that there should be no violence to the cultural and emotional flavour of the original.

இந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.

இனி உள்ளடக்கத்துக்கு வந்தால்,

இந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரதிதாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.

இருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.

இந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).

மகாகவி – தேரும் திங்களும்

“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன் ……..”
“The whole town has assembled
And is pulling the chariot
Come along
Let us also give a hand
Came that person ……..”

முருகையன் – இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…
(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)

“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”
“Ours an ancient burden of two thousand years.
Bent under the load
We have embarked on a journey, long…….”

வ. ஜ. ச. ஜெயபாலன் – கடற்புறம்

“காலமகள் மணலெடுத்துக்
கோலமிட்ட கடற்புறத்திற்
ஏழை மகள் ஒருத்தி……”
“The sheshore
Time’s handiwork
A carpet of granular sand-
Stands a daughter of poverty……”

எம். ஏ. நுஃமான் – கவிதை உள்ளம்

“வெண்முகிலோடு நாமும்
மிதக்கலாம் வீசுகின்ற
தண்ணிய தென்றலூடும்
தளிர்களின் மென்மையூடும்…….”
“Let us-
Float with cotton wool clouds.
Merge and play
Like water uniting with water
with cool floating breeze……”

சு. வில்வரத்தினம் – காயம்

“காயம் பட்டவனின்
குருதி கதறிற்று
கல் எங்கிருந்து?…….”
“The blood of the wounded
Wailed
Where from this stone?….”

இளவாலை விஜயேந்திரன் – காணாமல் போன சிறுவர்கள்

“ஆலமரமிருக்கும்
கீழோ ஊஞ்சல்
ஆடிக்களிக்கவென
நீளவிழுதிருக்கும்……..”
“The mighty banyan tree
Aerial roots
As swings
To sway in glee……”

சிவரமணி – முனைப்பு

“பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தை போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்பட்டன……”
“Like a corpse
Ravaged by ghosts
I was desecrated.
Finer emotions
Vandalised
By blood-soaked hands”

உமாஜிப்ரான் – இம்சை

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்,
பசித்த புலியின் குரூர வசீகரம்…..”
“Body bursting with machismo
Roving eyes
Brimming with leahery
With the savage allure
Of a hungry tiger on prowl….”

இவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.

Read More..
யாழிலிருந்து ஜீவநதி 0 comments

அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்



என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து வருமா?? அல்லது வராமல் விட்டிடுமோ?? வரவேணும்.

கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், சிறுகதைகள், நூல் அறிமுகம், கலைஇலக்கிய நிகழ்வுகள் எண்டு எல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கு.

புதுப்புனல் என்கிற பகுதியூடாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மிகச்சிறப்பாய் உள்ளது. இது மேலும் பலரை எழுதவும் வாசிக்கவும் வைக்கும்.

எழுத்துருக்களை பயன்படுத்துதலில இன்னும் சிறிய கவனம் வேண்டும் எண்டுறது என்ர எண்ணம். த. ஜெயசீலன் எழுதிய இரண்டு கவிதைகளையுமே வாசிக்க முடியேல்ல. என்னைப்பொறுத்தவரை எழுத்துரு அவ்வளவு மோசமா இருக்கு.

முதல் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதின “இன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு”. சிவத்தம்பி ஐயா கட்டுரையை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம் அவ்வளவு ஆங்கில சொல்லுகள் அடைப்புக்குறிகளுக்குள்ள. புகையிரத அமைச்சு ரெயில்வே எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட வேண்டிய தேவை எனக்கு விளங்கேல்ல. மற்றபடி இதை இன்னமும் விரிவா எழுதியிருந்தா எனக்கு இன்னமும் விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.

தாட்சாயணியின் கெடுபிடி சிறுகதையும், கொற்றை பி. கிருஸ்ணானந்தன் உடைய வல்லைவெளி கவிதையும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற கொன்வே பற்றி சொல்லுகின்றன.

நோயின் கொடுமையினால்
நொந்தவர் மயங்கிவிழ
“கொன்வோய்” போய்முடியத்
தொண்ணூறு நிமிடங்கள்
ஆவி பிரிந்ததனால்
“அங்கிருந்து” அனுப்பப்படும்
பூதவுடல்களும்
பொறுமைதனையிழந்து
கண்ணைத்;திறந்து
காரணத்தை கேட்கின்ற
அதிசயங்கள் நடந்தாலும்
ஆச்சரியமில்லை

என்கிறார் கிருஸ்ணானந்தன்.

பேராசிரியர் சபா. ஜெயராசா எழுதியிருக்கும் “நவீன கலை இலக்கியப்புலப்பாடுகள்” எண்ட கட்டுரையை இன்னொருக்கா வாச்சா என்ன சொல்லுறார் எண்டு விழங்கும் எண்டு நினைக்கிறன்.

க. திலகநாதன் தன் நாட்டிய சாத்திரம் – சில அரங்கக்குறிப்புகள் என்கிற கட்டுரையில அரங்க முறைமைகள் பற்றி விளக்குகிறார். நாட்டிய சாத்திரத்தில 6000 சூத்திரம் இருக்குதாம். அப்படியா???

அரண் கதை மூலம் அ. தனஞ்செயன் என்ன சொல்ல வாறார் எண்டு விளங்கேல்ல.

நூல் அறிமுகப்பகுதியில ஊடறு வெளியீடாக வந்த “இசை பிழியப்பட்ட வீணை” கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி நிச்சயமாக எனக்கு பயனுள்ள பகுதியாக இருக்கும். புத்தகங்களை தேடிக்கண்டுபிடிக்கிற வேலை குறையும்.

குப்பிளான் ஐ. சண்முகம் தனது பலதும் பாராட்டும் பத்தி பகுதியல நுண்கலைத்துறையின் கண்காட்சி பற்றி எழுதியிருக்கிறார். அதில் அவர்களுக்கு மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு இன்னமும் இல்லை என்று எழுதியிருக்கின்றார். அதற்கு கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளை உதாரணத்துக்கு இழுக்கின்றார். மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறுவதாயின் அதன் கருப்பொருள் நிச்சயமாக ஓவியர்களை தூண்டுவதாக இருக்கவேண்டும். அப்படியான கருப்பொருள்களை நினைப்பதே தடையாயிருக்க எங்கிருந்து வரும் ஓவியம் என்பதை அவர் எண்ணத் தவறிவிட்டார். இந்த கண்காட்சியை நான் பார்ப்பதற்கு சில நாட்களின் முன்னர் ஒரு ஓவியக் கண்காட்சியை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதனை விட இந்த கண்காட்சி பலமடங்கு சிறந்ததாக இருந்தது என்பது என் எண்ணம்.

Read More..
குறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா 0 comments

இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து தங்கியிருந்த காலம் வரைக்கும் புத்தகத்திலதான் காசு கூடும். “இண்டைக்கு ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போயிராதயுங்கோ பாருங்கோ சனிபோல வாருங்கோ”, இது ரவி அண்ணை. வந்ததுக்கு ஒண்டெண்டான்ன வேணும் எண்டு சொல்லி அ. யேசுராசாவோட குறிப்பேட்டிலிருந்து… புத்தகத்தை வாங்கி கொண்டு வந்து ஒரே மூச்சில வாசிச்சாது.

அலை வெளியீட்டில வைகாசி 2007 இல வெளிவந்திருக்கு. 2003 இல வந்த அவற்ற பதிவுகள் மாதிரிதான், இருந்தாலும் பதிவுகள் “அலை” சஞ்சிகையில வந்தது (பிறகு அலை பத்மநாப ஐயரோட முயற்சியால தொகுப்பாயும் வெளிவந்தது) ஆனா இது நீண்ட காலப்பரப்பை உள்ளடக்கிறதால அக்காலத்தாக்கங்கள் முதிர்வுகளின் வெளிப்பாடுகள் அப்பிடியே தெரியுது, 1970 இல எழுதின “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” தொடக்கம் 2006 இறுதியில எழுதின “மனிதனாயிருந்த மனிதன்” ஏ.ஜே பற்றிய நினைவுக்குறிப்புகள் வரைக்கும் இருக்குது. இது ஒரு விமர்சகனோட குறிப்புகளாய் இருக்கிறதால இதில இருக்கிற குறிப்புகள் பற்றி எதுவுமே நான் சொல்லுறதுக்கில்ல. ஆனா நீங்களே அவரோட என்னுரைய கீழ வாசிச்சு பாருங்கோ.


‘………..தேவையற்று போய்விட்ட மதுபானக் கடையைப்போல இப்போ கலை இலக்கியக் ‘கடை” களும் எனக்கு தேவைற்றுத் தெரிந்தன……….” – மு. தளையசிங்கம்.

மு. த. வின் ‘பக்குவம்” என்னிடமில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது நினைவுக்கோப்பை கசப்பில் நிரம்பி வழிகின்றது.

எமது கலை, இலக்கிய வாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்”? பட்டம், பணம், பதவி – பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த முயல்கின்றனர்!

கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலமிக்க தந்திரச்செயல்களுடன் – ராஜ கம்பீரராய் பெருமைகாட்டி பவனி வருகின்றனர். அதிசய ஆடை ‘அணிந்த” அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மில் பலர் ஏனில்லை?

நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றிடையே இடைவெளியில்லாத-
இயன்றவரை நேர்மையான வாழ்வை கொண்டிருக்க வேண்டுமென்ற-

அறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.

இந்நிலையில் இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற எழுத்தாளனை ‘சர்வாதிகாரி – கிட்லர்” எனச்சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்” ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.

மு.த. , ஏ.ஜே , போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக் காரரே எமக்குத் தேவை. புகழ், பணம், பதவி என்று அந்தரப்படாது தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வு கொண்ட அத்தகையோரை காண்பது அரிதாகவே உள்ளது.

‘ஒரு வாசகனின் அபிப்பிராயம்!” எனது முதற் கட்டுரையாகும். கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனாயிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கலாநிதி. கா. கைலாசபதியின் ‘சமர்” இதழ் கட்டுரையொன்றிற்கு பதிலாக எழுதப்பட்டதே ‘குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை!”. ஆனால் இக்கட்டுரையை வெளியிட சமர் ஆசிரியரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.

தெல்லிப்பழை கலை இலக்கிய களம் ஒழுங்கு செய்த சிறுகதை நாள் நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ‘ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும்” என்ற தலைப்பினைத்தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றை படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.

மாணவர் – இளைஞர்களுக்கான சாளரம் இதழில் அறிமுகக் கட்டுரையாக எழுதப்பட்டதே, சி. வி. வேலுப்பிள்ளையின் ‘தேயிலைத் தோட்டத்திலே….”

இறுதியாயுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகையில், பத்திரிகைத்தேவையும் பொருத்தமும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.

எல்லாக்கட்டுரைகளும் ஏற்கனவே பிரசுரமாகியுள்ள போதும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.

அ. யேசுராசா அவர்களின் முகவரி
இல 1, ஓடைக்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

Read More..
Next Page »