Posts Tagged "ஊரோடி"

புதிய வடிவம் புதிய வசதிகள்

வேர்ட்பிரஸ் பதிப்பு 3.1 வெளிவந்ததில் இருந்து ஊரோடியின் வடிவமைப்பை புதிய வசதிகளை உள்ளடக்கி மாற்றுவதற்கு எண்ணயிருந்தேன். நீண்ட காலங்களின் பின்னர் இப்போதுதான் முடிந்திருக்கின்றது.

வேர்ட்பிரஸில் இருக்கும் “இடுகை வகைகள்” என்கின்ற வசதி இவ்வார்ப்புருவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் tumblr போன்ற பதிவு வகைகளை உருவாக்க முடிவதுடன் அவற்றை சிறிது வித்தியாசமாக வடிவமைப்பும் செய்ய முடிந்துள்ளது.

இதன் மூலம் எனக்கு பிடித்த புகைப்படங்கள் தொடுப்புக்கள் என்பவற்றையும் இலகுவாக இனவருங்காலங்களில் பதிய முடியும் என எண்ணுகின்றேன்.

இப்புதிய வடிவமைப்பு தொடர்பான உங்கள் கருத்தக்களை சொல்லுங்கள்..

18 தை, 2012

ஊரோடியை கேளுங்கள்!

நீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.

வேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் கேள்விகளை நீங்கள் இங்கே கேட்கலாம். இதன்மூலம் பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் தவிர்க்க முடியும்.

இவ்விணையத்தில் நான் மட்டும் பதிலளிப்பது என்றில்லாமல் பதில் தெரிந்த எவரும் பதிலளிக்க முடியும். இவ்விணையத்தளத்தை வேர்ட்பிரஸ் 3.1 தமிழ் மொழிபெயர்ப்புக்கான ஒரு பரிசோதனை இடமாகவும் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

அன்புடன்
பகீ

28 தை, 2011

மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற..

கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.

logo

ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் எங்கள் மீது இற்க்கிவிடும் அவர்களின் துயரங்களினையும் துக்கங்களினையும் தாங்கவேண்டடியவர்களாயும் இந்த நான்குமாதங்களும் கடந்து போயிருக்கிறது. இன்னமும் இது தொடர்ந்தாலும், பழகிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. (எங்களுக்கு எல்லாமே பழகிப்போயிருக்கிறது)

இப்போது ஊரோடியில் திரும்பவும் ஏதாவது அலட்டுவது என்று முடிவுடன் திரும்பி வந்திருக்கின்றேன். நிச்சயமாக கடந்து போன மாதங்கள் பற்றியதாக அது இருக்காது. எப்போதாவது சாத்தியப்படும் என்ற நிலை வரும்போது அவைபற்றி நிச்சயம் எழுதுவேன்.

பதிவர் சந்திப்புக்காய் ஏ-9 வீதியால் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை நிச்சயம் ஒரு நாள் தரவேற்றுவது என்ற யோசனையும் இருக்கின்றது. பாரப்போம். இடையிலே தடைப்பட்டிருந்த எனது இணையத்தூடான வேலையையும் இப்போது தொடரத்தொடங்கியிருக்கின்றேன். இப்போது மீளவும் அதிகம் வாசிக்க முடிகிறது. நல்ல புத்தகங்கள் கிடைப்பதுதான் அரிதாகி இருக்கிறது. (நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் – யாழ்ப்பாணத்தில் கிடைக்கவும் வேண்டும்.) பார்ப்போம்.

யாழ்ப்பாணம்.

பொருட்களின் விலை குறைந்திருக்கிறது, யாழப்பாண உற்பத்திகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதிவேக இணையம் வந்திருக்கிறது அத்தோடு வீதிக்கு வீதி நெற்கவேக்களுமாக. யாழ்ப்பாணத்துக்குள் அதிகம் இறக்குமதியாவது மதுபானம்தான் – அரச அதிபரின் கூற்று. தேர்தல் ஒன்று வந்துபோயிருக்கிறது யாருக்கும் தெரியாமல். யாழ்ப்பாணத்தை பற்றி தொடர்ந்து அதிகம் அலட்ட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஊரோடி.

27 புரட்டாதி, 2009