கவிஞர்கள்

இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.

கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். பயம் வேண்டா. ஆனால் உண்மைக்கவிதை ஏனைய வரிசையில் இருந்து உயிர்தப்புமோ என்றுதான் அச்சம் வருகின்றது. கவிதைப்பெருக்கும் விமரிசனப்போக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் காக்காய்ப்பொன்னையும் ஒன்று செய்து விடுமோ என்றுதான் எச்சரிக்கை விடுக்கவேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

” கவிகள், அதாவது கவிஞர்கள் உண்மையைச் சிந்தித்துக்கொண்டு சொல்வதில்லை. உண்மைக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். அவர்களால் நாட்டுக்கு பெருந்தீமை உண்டாகின்றது. அவர்களை அரசாங்கம் நாடுகடத்த வேண்டும்.”

என்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே, கிரேக்க தேச பேரறிஞரான பிளேற்றோ ஒரு பெரிய எச்சரிக்கை செய்திருக்கிறார். பிளோற்றோவின் எச்சரிக்கை நவீன விமரிசகர் சிலருக்கு பெரிய தலையிடியை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது.

விமரிசகர்கள் பேரறிஞரான பிளேற்றோவைத் திட்டி வீண்பழி சுமத்தாமற் கவிதையையும் கவிஞர்களையும் வரிசை செய்து, தராதரங்களை ஆராய்ந்து, பிளேற்றோ வெறுக்கும் கவிகளை கண்டறிவதில் தமது விமரிசனத் துறையை விரிப்பது நன்று என்று தோன்றுகின்றது.

தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார், “நாம் எண்ணுகின்ற கேட்கின்ற கருத்துக்களை அப்படியே கொள்ளாமல், அக்கருத்துக்களை முதலில் ஐயுற்று பின் ஆராய்ந்து தெளிந்து, மெய்யான மூலக்கருத்தை அறிதல் வேண்டும்” என்று உண்மைக்கருத்தை காண்பதற்கு ஒரு சட்டம் வகுத்திருக்கின்றார்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

“ஐயத்தி வீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து”

என்பன உண்மையைக்காண வகுத்த வழிகள்.

ஒரு வீரன் தயைகாட்டாமற் பகையை கொன்று குவித்தல் பேராண்மை. ஆனால், பகைவனுக்கு நினையாப்பிரகாரம் ஓர் இடையூறு நேர்ந்தால், உடனே அந்த வீரன் தன் பகைவனுக்கு உபகாரியாய் மாறவேண்டும். அது பேராண்மையாகிய வீரத்தின் சிகரமாயிருக்கும்.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”

உபகாரியாய் மாறுதல், “பேராண்மை” என்ற வாளின் கூராயிருக்கும், என்றும் சொல்லலாம். வீரத்தைப்பற்றிய இந்த உண்மை திருவள்ளுவ நாயனாரின் தெய்வப்புலமையிற் கண்டது. இப்படியான அனேக உண்மைகள், இமாசலத்திலே மருந்துப்பூண்டுகள் பரவியிருப்பதைப்போலத் திருக்குறளாகிய பாற்சமுத்திரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அதுஅது கைவந்தவர்கள் அதில் அதில் ஈடுபட்டவர்கள் அதை அதைத் தம் வல்லமைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.

கம்பர், வள்ளுவர் கண்ட வீரசிகரமான அமிர்த தாரையில் ஈடுபாடுற்று, அந்த வீரதீர அமிர்த தாரையை ஒரு சற்பாத்திரத்திலே ஏந்தி எடுத்து, வெகு பக்குவஞ்செய்து, அந்த உண்மையை ஒரு அமிர்த சஞ்சீவியாக்கி இந்த உலகுக்கு வழங்கியிருக்கின்றார். அந்த அமிர்த சஞ்சீவிதான் பின்வரும் பாட்டு:

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

தன் மனை வாழ்வுக்கு கேடு சூழ்ந்த மகாதுரோகியும் பராக்கிரமசாலியுமான இராவணன் நிராயுதபாணியாய், இருபது கைகளுந் தொங்கப் பத்துத் தலைகளுங் குனிந்து நாணி எதிரில் நிற்கின்றான். அவனை கொன்று குவிக்க அது நல்ல சமயம். சிறீராமன் தன் வீரத்துக்கு மறுச்செய்யவில்லை. உடனே உபகாரியாய் மாறி, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று அவனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கி, வீரசிகரத்தில் வள்ளலாய் விளங்குகின்றான். வள்ளுவர் கண்ட உண்மையைச் சற்பாத்திரமாகிய சிறீராமனில் வைத்துப் புனைந்து சொல்லுவது ‘தகும் தகும்’ என்று ஒப்புக்கொள்ளுகின்றது புலமையுகம். அதனாலே கம்பர் சாதாரண கவிச்சக்கரவர்த்தியாயினார். கம்பர் தாமாக ஓர் உண்மையை காணாமலிருத்தல் கூடும். ஆனால், வள்ளுவர் உள்ளிட்ட மகான்கள் கண்ட உண்மையைப் பேணி வியந்து பயன்படுத்தியிருக்கின்றார். பேணிப் பயன் செய்த பெருமை கம்பருக்குண்டு.

மூலிகைகளைக் கண்ட சித்தர்கள் பெரியவர்கள். அம்மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்த படியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள்.

அவ்வாறே, திருவள்ளுவரும், சங்கத்துச் சான்றோர்களான புலவர்களும் பெரிய உண்மைகளைக் கண்ட மிகப்பெரியவர்கள். அவ்வுண்மைகளில் ஓரோவொன்றைப்பயன் படுத்துகின்ற கவிச்சக்கரவர்த்திகள் அடுத் படியில் நிற்கும் பெரியவர்கள்.

புலவர்களை அடுத்து கவிச்சக்கரவர்த்திகள்; அவர்களை அடுத்து சாதாரண கவிஞர்கள் இருக்கின்றார்கள். வள்ளுவர் கண்ட உண்மையைக் கம்பர் கண்டு வியந்து புனைந்தார். அந்த ஆற்றல் சாதாரண கவிஞர்களுக்கு இல்லாமல் இருக்கும். ஆனால், தமது அறிவின் எல்லைக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும் இயற்கை அழகுகளையும் சனங்களை வசீகரிக்கத்தக்க வகையிற் சொல்லுகின்ற ஒரு சாமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.

மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடிபூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருருக்குமோ ஆரறிவார்.

இது கவிஞர் ஒருவரின் கற்பனா சாமர்த்தியம். சூரியகாந்திப்பூ முகம் மலர்ந்து மஞ்சள் மகரந்தந் தோய்ந்து, சூரியன் செல்லுந் திக்கை நோக்கித் தவம் கிடக்கின்றது. இந்தக் கள்ளத் தவத்தைச் சூரியன் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டாற் சிரிக்குமோ! அழுமோ! ஆரறிவார்!!

வண்ணானில் மொழிகேட்டு வனம்விடுத்த சீதைதனை
இந்நாளுந் தேடுதல்போல் இருங்குரங்கு நெருங்கிடுமே.

இது மற்றொரு கற்பனை. அழகிகள் காட்டு வழியிற் சென்றால் அங்குள்ள குரங்குகள் நெருங்கி எட்டிப்பார்க்கின்றன. வாண்ணான் ஒருவனின் வார்த்தையை நம்பி, இந்த இராமன் சீதையைக் காடுகாட்டின கொடூரம், இன்னுங் குரங்குச் சந்ததிகளை வருத்திக்கொண்டிருக்கின்றது போலும்.

பள்ளு நாடகங்கள், குறவஞ்சிகள், எத்தனையோ வகையான நாட்டுப்பாடல்கள், பரணிகள் என்றிவைகள் சாதாரண கவிஞர்களின் கவிதா சாமர்த்தியங்கள். இவைகள் பெரிய இலட்சிய உண்மைகளைச் சாதியாமல் விட்டாலும், மனிதனுக்கு ஒருவகை களிப்பை ஊட்டி, நல்ல அமைதியான பண்பாட்டை வருவிக்கின்றன; அன்றி அவனை, பெரிய உண்மைகளை கொள்ளுதற்கேற்ற கொள்கலமும் ஆக்குகின்றன. சாதாரண கவிஞர்கள், முற்றத்தை அழகு செய்கின்ற பூந்தோட்டம் போன்றவர்கள். இவர்களும் ஒரு நாட்டின் அழகுச் செல்வங்களே.

கவிஞர்களுக்கு மேலே கவிச்சக்கரவர்த்திகள், அவர்களுக்கு மேலே சான்றோர்களான புலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை பிளாற்றோ நிந்திக்கவும் இல்லை; நாடுகடத்தவும் இல்லை. பிளேற்றோ சீறிப்பாய்கின்ற கவிஞர்கள், மேலே காட்டப்பட்ட முத்திறத்தவர்களும் அல்லாதவர்கள். அவர்கள் கவிதை வெறியர்கள். பாடாமல் இருக்கமாட்டாதவர்கள். பாடுகின்ற பைத்தியம் உள்ளவர்கள். பாவம்! அவர்கள் நன்றாகப் பாடலாம். அவர்களை யாருந் தடை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குச் சனநாயக உலகத்தில் பெரிய செல்வாக்கும் இருக்கின்றது. அவர்கள் ஓயாமற் பாடலாம். ஆனால், அவர்கள் தயைகூர்ந்து தம்மறிவின் எல்லையுள் அடங்கி நின்று பாடுதல் வேண்டும்; ஒரு பட்சியைப் பாடலாம்; மரஞ்செடிகளைப் பாடலாம்; காலைமாலைகளை வருணிக்கலாம். கடற்கரை குளக்கரை மற்றும் சோலைகள் மலைகள் யாவற்றையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். பிளேற்றோ தடுக்க மாட்டார். ஆனால் கவிதை வெறியர்கள் அவ்வளவில் அடங்குவார்களா? தங்கள் தலைக்கு அப்பாற்பட்ட விடயம், தலைக்குள் அடங்கின விடயம் என்ற பேதம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லாம் அபேதமே. கடவுள், வண்ணத்துப்பூச்சி, காதல், சமயம், தத்துவம், அரசியல் முதலிய எல்லாவற்றையும் அவர்கள் பாடிவிடுவார்கள். பாமர சனங்கள் கூடுமிடம் அவர்களுக்கு கவியரங்கமாயிருக்கும். சனநாயக அரசியலின் வேரை அசைத்து விடுவார்கள் அவர்கள். அதுதான் பிளேற்றோவுக்கு கோபம். ஒரு பொறுப்புள்ள சிறிய உத்தியோகத்தைக் கூட ஒரு நிமிட நேரம் வகிக்க முடியாத கவிதைவெறியர்கள் அரசாங்கத்துக்கு கவிதை பாடுகின்றார்களே. அவர்களை நாடுகடத்தாமல் என்ன செய்வது? என்கின்றார் பிளேற்றோ. பிளேற்றோவில் என்ன குற்றம்?

பாட்டுப் பாடுகின்றவர்கள் இன்னும் ஒரு பகுதியார் இருக்கின்றார்கள். அவர்கள் கடிய கொடிய வித்துவான்கள். அவர்களுடைய கருத்தை பிளேற்றோ மதிப்பார். ஆனாற் கருத்து புலப்படுவதில்லை. சிறிது நாட்பட்டால், பாடிய அவர்களுக்கே கருத்து கலங்கிப்போகின்றது. இப்படிப்பட்ட பாடல்களை அச்சிட்டு பரப்பாமல் இருப்பது புண்ணியம். வித்துவான்கள் தங்கள் கருத்துக்களை வசனநடையிற் சொல்லிவிடலாமே என்று கவிதா சாமர்த்தியம் வாய்ந்தவரான மகாலிங்கசிவம் அடிக்கடி சொல்லுவதுண்டு. கவித்துவம் அற்ற கவிதைகளைக் காணக் கேட்க அவரால் முடிவதில்லை; கூசுவார்.

இப்பொழுது வித்துவத்திறமை, கவித்துவம் இரண்டும் சூனியமான மற்றொரு பகுதியாரும் பாட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுக்குப் பணப்பஞ்சத்திலும் சொற்பஞ்சம் மகாமோசம்.

பச்சைக்குழந்தைகளின் செவியையும் நாவையும் அந்த சொற்பஞ்ச பாடல்கள் – ஓசை கெட்ட பாடல்கள் – கெடுத்தே விடும். சொல்லுஞ் சொல்லும் பொருந்தும் பொருத்து, பாலும் பாலும் பொருந்தும் பொருத்தாயிருக்க வேண்டும். ஓசையைப் பாட்டிற் கட்டக்கூடாது. பாட்டிலிருந்து ஓசை வரவேண்டும். “இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்” என்ற திருப்புகழை எடுத்துப்பார்க்க மேற்காட்டிய இரண்டும் புலனாகும். இரண்டுங்கெட்ட பாடல்களைப் பாடாமலிருக்க வேண்டுமென்று அரசாங்கம் கடுஞ்சட்டம் விதிக்க வேண்டும்.

ஆறு பகுதியான பாட்டுக்காரர்கள் இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கின்றார்கள். ஆறாவது பகுதியினர் வெகு மோசமானவர்கள். ஐந்தாவது பகுதியினர் கவித்துவம் இல்லாதவர்கள். நாலவது பகுதியினர் மகாவித்துவ சாமர்த்தியம் உள்ளவர்கள்; ஆனால் நாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள். மற்றையோர் படிப்படியே உயர்ந்தவர்கள். சங்கத்துச் சான்றோர்கள் “பொய்யடிமையில்லாத புலவர்கள்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாராட்டப்பட்டிருக்கின்றார்கள்.

குறிச்சொற்கள்: , ,

3 பின்னூட்டங்கள்

  1. விமல் சொல்லுகின்றார்: - reply

    சூப்பர் …சார்

  2. சிவம் சொல்லுகின்றார்: - reply

    என்னங்கய்யா சும்மா பிச்சி உதறிட்டிங்க……….

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    வாங்க சிவம், கமல்,

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.