Posts Tagged "கவிதை"

ஆத்மாநாம் படைப்புகள்

2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.

ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் சிறிதளவு காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு தீவிரமான ஓட்டம் ஆத்மாநாமின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.

சில ஆத்மாநாமின் வரிகளை பாருங்கள்.

ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.

பாட்டாளி மக்களுக்கான இந்தவரிகளும் யோசிக்க வைக்கிறது

இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு

மற்றவர்களுக்காய் பாடுபடும் ஒருவனாக அனேக கவிதைகளில் ஆத்மாநாம் காணப்படுகிறார்.

பழக்கம் எனும் இந்தக் கவிதையில் வரும் வரிகள் ஆத்மாநாமை நன்கு வெளிப்படுத்துகின்றன.

என் கால்கள்
என் நடை
என் சதுரம்

ஆத்மாநாம் தன்னைப்பற்றிய சிறு கட்டுரையும் இத்தொகுப்பில் காணப்படுகின்றது.

19 ஐப்பசி, 2006

கவிதைகள்

எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்

கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது

கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை.

8 ஐப்பசி, 2006

முட்டைவாசிகள்

அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம்.

பேசாமல் இருப்பதன் மூலம்
சொற்களின் எல்லையை
மௌனத்தை
எட்டிப்பிடிக்கின்றேன்.
பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான்.

இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி தேடுகிறது
செத்த மரத்தை
விமர்சகர்களை குறிவைக்கும் இந்த ஹைக்கூவை நீங்கள் கேள்விப்படாமல் போயிருக்ககூடும்.

இயேசுவைப்பற்றிய இவ்வளவு அழகான கவிதையை நான் ஒரு போதும் கேட்டதில்லை
இத்தகைய இரக்கமுடைய
நிலத்தை
யாராவது கண்டதுண்டா?
இங்கே முள்ளை விதைத்தால்
ரோஜா முளைக்கிறது.

சார்லஸ் மிங்கசின் வினோதமான கற்பனைகளை எமக்கும் ஊட்டுகிறார் நூலாசிரியர்
இறந்துபோன மயானங்களில்
எல்லா இடங்களிலும்
இறந்தவர்கள்
உயிருடையவர்களை
அமைதியாக
புதைத்துக்கொண்டிருப்பார்கள்
எப்படி இருக்கிறது இது?

காதல் பற்றி ஹாரிட்க்ரேன் சொல்வதை பாருங்கள்
சிறுநீர்த்தொட்டியில்
வழுக்கிச் செல்லும்
எரிந்த தீக்குச்சி
காதல்
கொஞ்சம் திகைக்கவும் யோசிக்கவும் வைக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் வாசிக்க நல்ல நூல் என்று நிச்சயமாய் சொல்லக்கூடிய நூல். வாசித்துத்தான் பாருங்கள். (காசு குடுத்து வாங்கி வழமைபோல)

8 ஐப்பசி, 2006