யாழ்ப்பாணம்

ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.



எதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற எனக்கு, யுத்தத்தின் சன்னத்தம் எந்நேரமும் வெளித்தெரிய நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வருடகாலம் என்னால் முடிந்தளவு தொடர்ச்சியாக டயல் அப் இணைப்பூடாக வலைப்பதிய முடிந்ததோடு என்னால் முடிந்தளவு வலைப்பதிவர்களுக்கு தொழிநுட்பரீதியாக உதவமுடிந்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

இந்த இரண்டு வருட காலத்தில் எனது நண்பர்களிடையே ஊரோடி எனக்கு ஒரு வித்தியாசமான பெயரை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனது பெயர் தெரியாமலே ஊரோடி என்கின்ற பெயரூடாக உறவாடுகின்ற நிறைந்த இணையநண்பர்களை இந்த வலைப்பதிவு ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அத்தோடு புளொக்கரில் இருந்த ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டுவந்து வலைப்பதிய தொடங்கிய பின்னர் அதுவே எனது இணைய வேலைகளுக்கு ஆரம்பமாக அமைந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வலைப்பதிய ஊக்கியாக நின்ற சயந்தன், வலைப்பதிய வந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வலைப்பதிய வேண்டும் என்று பின்னூட்டங்கள் மூலமும் மின்னஞ்சல்கள் மூலமும் காலத்துக்கு காலம் ஊக்கப்படுத்திய ஈழத்து மற்றும் இந்திய இணைய நண்பர்கள், குறிப்பாக தொடக்க காலத்தில் மிகவும் ஊக்கப்படுத்திய யோகன் அண்ணா, மலைநாடான், மதி என்று நீளும் பட்டியல் (எல்லோரையும் குறிப்பிட தனி ஒரு பதிவு தேவை அதனால் மன்னிக்கவும்), என்னோடு எப்போதும் கூட இருந்து, ஊரோடி பற்றி சொல்லும் எனது பள்ளிக்கால நண்பர்கள் என்று நன்றி சொல்லவேண்டியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அத்தோடு என்னைப்பார்த்து வலைப்பதிய வந்தவர்கள் என்று சொல்லி ஊக்குப்படுத்தியவர்களும் உள்ளார்கள்.

வழமைபோல சோதனைகளும் ஏராளம். யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்காக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.

அதைவிட மிக மோசமாக எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பில் வேலைபார்த்து இந்த வருடம் பங்குனி மாதத்தில் ஊரோடியை வழங்கியை விட்டு பூரணமாக அழித்தபின்னர், பேசாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்கின்ற முடிவுக்கே வந்தபின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் செலவழித்து மீண்டும் ஊரோடியை இணையத்துக்கு கொண்டு வரமுடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ஏறத்தாள இரண்டாயிரம் பின்னூட்டங்கள் ஒரேயடியாக அழிந்து போயின.

மூன்றாவது வருட நிறைவை எழுத முடியுமா என்று இப்போதே சொல்லமுடியாத நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது. காலம் நேரம் எல்லாம் நல்லது செய்தால் வருடங்களானாலும் ஊரோடியை தொடர ஆசை.

26 புரட்டாதி, 2008

அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்

இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,

அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.

ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.

என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.

இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம். செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.

விகுதி.

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.

என்று நன்னூல் விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.

இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.

இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.

இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.

இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது.

வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் “னவ்வீறு” சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.

வடிகட்டி எனும்போது அங்கு சேரும் “இ” விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு “இ” விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.

அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.

22 ஆவணி, 2008

துர்க்காபுரம் – தெல்லிப்பளை

நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.

சில படங்கள் உங்களுக்காக.








18 ஆடி, 2008