Posts under Tag: பண்டிதமணி
திருவருட்பயன் – பண்டிதமணி 0 comments

பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும். இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். அவர் எழுதியிருந்த சில பழந்தமிழ் சமைய நூல்கள் சார்பிலான கட்டுரைகளும் விளக்கவுரைகளும் அவரை ஒரு உரையாசியர் என்ற அளவில் கருதுமளவிற்கு இருக்கவில்லை.

இந்த புத்தகத்தை வாசிச்ச பிறகு அப்பிடி சொல்லேலுமோ?? நீங்களும் ஒரு பகுதியை பாருங்கோ.

எமக்கெ னெவனுக் கெவைதெரியு மவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.

(எமக்கு என் தெரியும், எவனுக்கு எவை தெரியும், அவ்வத் தமக்கு அவனை, வேண்டத் தவிர்)

எமக்கு என் தெரியும் – ஞான சந்ததியில் உன் முன்னோராகிய எமக்கு உனக்கு உணர்த்துமாற்றில் என்ன தெரியும்,
எவனுக்கு எவை தெரியும் – அறிந்தோ ரெனப்படுவாருள் எவனுக்கு உய்யுமாறுகளில் எவை தெரியும்,
அவ்வத் தமக்கு அவனை – வெவ்வேறு பந்த நிலையிலுள்ள ஆன்மாக்களுக்கு அவ்வந் நிலைக்குத் தக்கபடி உணர்த்தவல்ல தம்முதலாகிய அருட்குருவை,
வேண்டத் தவிர் – பெறும்படி காத்திரு, மற்றவை அனைத்தையும் விடு, குருவின் பொருட்டே இவ்வுலகில் தங்கு.

“எமக்கென் தெரியும்” என்றார் ஞான சந்தான முதல்வர் ஆலமர் கடவுளாதலின்

“என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக என்றொருவன் – சொன்னபடி
சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்
சொல்லக்கேள் நானுனக்கச் சொல்.”

என்னுந் திருக்களிற்றுப்படியார் காண்க.

“எவனுக்கு எவை தெரியும்” என்றார், ஓரான்மா தன்னைப்பற்றிய இருளைச்சார்ந்தறிதலும் இருணீங்கிய வழி ஒளியைச்சார்ந்தறிதலும் அன்றி வேறறிவு அதற்கின்மையின், பிறிதோரான்மாவிற்கு வேண்டியவைகளை அது அறியாதாதலின், அவ்வவ்வான்ம நிலையை அறிந்தருளவலல முதல்வனே வெளிப்பட்டுபகரிப்பனாதலின் அவ்வத் தமக்கு அவனை வேண்ட என்றார்.

இந்தப் பூமியிலே மானிடப்பிறவியிலன்றி ஞானம் வராதென்ப.

“தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து
பவஞ்செய்து பற்றறுப்பா ராகத் – தவஞ்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு”

என்பது சிவஞானபோத வெண்பா. சகலர்க்குப் பூமியில் குருவாக வந்து முதல்வன் உபகரித்தல் இன்றியமையாமையின் “வேண்டத்தவிர்” என்றார்.

ஏனைய நல்வினைகள் பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் ஆதலின் சிவபுண்ணியங்கள் இறப்பில் தவம் எனப்படுவன. சரியை கிரியை யோகங்களுக்குச் சிறந்த பயன் ஞானமே.

“சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு”

என்றவாறு குருவின் உபதேசத்தாலன்றி ஞானமாகிய தெளிவு பிறவாது. முனிவர்கள் ஆலமர் கடவுளுடைய சின் முத்திரையினாலேயே ஞானமெய்தினரென்ப. “சரியை கிரியா யோகங்களைச் செய்துழி அவை ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா வாகலன்” என்பது சிவஞானபோதம்.

ஞானமும் அதனை யருளுகின்ற ஞானகுருவுமன்றி எடுத்த பிறப்புக்கு வேறுபயன் யாது மில்லையாதலின், “தவிர்” என்றார்.

இருப்பதாயின், அருட் குருவை வேண்டி இருக்குக.

எப்படி இருக்கிறது பண்டிதமணியின் உரை ????

Read More..
கவிஞர்கள் 3 comments

இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.

கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். பயம் வேண்டா. ஆனால் உண்மைக்கவிதை ஏனைய வரிசையில் இருந்து உயிர்தப்புமோ என்றுதான் அச்சம் வருகின்றது. கவிதைப்பெருக்கும் விமரிசனப்போக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் காக்காய்ப்பொன்னையும் ஒன்று செய்து விடுமோ என்றுதான் எச்சரிக்கை விடுக்கவேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

” கவிகள், அதாவது கவிஞர்கள் உண்மையைச் சிந்தித்துக்கொண்டு சொல்வதில்லை. உண்மைக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். அவர்களால் நாட்டுக்கு பெருந்தீமை உண்டாகின்றது. அவர்களை அரசாங்கம் நாடுகடத்த வேண்டும்.”

என்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே, கிரேக்க தேச பேரறிஞரான பிளேற்றோ ஒரு பெரிய எச்சரிக்கை செய்திருக்கிறார். பிளோற்றோவின் எச்சரிக்கை நவீன விமரிசகர் சிலருக்கு பெரிய தலையிடியை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது.

விமரிசகர்கள் பேரறிஞரான பிளேற்றோவைத் திட்டி வீண்பழி சுமத்தாமற் கவிதையையும் கவிஞர்களையும் வரிசை செய்து, தராதரங்களை ஆராய்ந்து, பிளேற்றோ வெறுக்கும் கவிகளை கண்டறிவதில் தமது விமரிசனத் துறையை விரிப்பது நன்று என்று தோன்றுகின்றது.

தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார், “நாம் எண்ணுகின்ற கேட்கின்ற கருத்துக்களை அப்படியே கொள்ளாமல், அக்கருத்துக்களை முதலில் ஐயுற்று பின் ஆராய்ந்து தெளிந்து, மெய்யான மூலக்கருத்தை அறிதல் வேண்டும்” என்று உண்மைக்கருத்தை காண்பதற்கு ஒரு சட்டம் வகுத்திருக்கின்றார்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

“ஐயத்தி வீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து”

என்பன உண்மையைக்காண வகுத்த வழிகள்.

ஒரு வீரன் தயைகாட்டாமற் பகையை கொன்று குவித்தல் பேராண்மை. ஆனால், பகைவனுக்கு நினையாப்பிரகாரம் ஓர் இடையூறு நேர்ந்தால், உடனே அந்த வீரன் தன் பகைவனுக்கு உபகாரியாய் மாறவேண்டும். அது பேராண்மையாகிய வீரத்தின் சிகரமாயிருக்கும்.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”

உபகாரியாய் மாறுதல், “பேராண்மை” என்ற வாளின் கூராயிருக்கும், என்றும் சொல்லலாம். வீரத்தைப்பற்றிய இந்த உண்மை திருவள்ளுவ நாயனாரின் தெய்வப்புலமையிற் கண்டது. இப்படியான அனேக உண்மைகள், இமாசலத்திலே மருந்துப்பூண்டுகள் பரவியிருப்பதைப்போலத் திருக்குறளாகிய பாற்சமுத்திரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அதுஅது கைவந்தவர்கள் அதில் அதில் ஈடுபட்டவர்கள் அதை அதைத் தம் வல்லமைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.

கம்பர், வள்ளுவர் கண்ட வீரசிகரமான அமிர்த தாரையில் ஈடுபாடுற்று, அந்த வீரதீர அமிர்த தாரையை ஒரு சற்பாத்திரத்திலே ஏந்தி எடுத்து, வெகு பக்குவஞ்செய்து, அந்த உண்மையை ஒரு அமிர்த சஞ்சீவியாக்கி இந்த உலகுக்கு வழங்கியிருக்கின்றார். அந்த அமிர்த சஞ்சீவிதான் பின்வரும் பாட்டு:

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

தன் மனை வாழ்வுக்கு கேடு சூழ்ந்த மகாதுரோகியும் பராக்கிரமசாலியுமான இராவணன் நிராயுதபாணியாய், இருபது கைகளுந் தொங்கப் பத்துத் தலைகளுங் குனிந்து நாணி எதிரில் நிற்கின்றான். அவனை கொன்று குவிக்க அது நல்ல சமயம். சிறீராமன் தன் வீரத்துக்கு மறுச்செய்யவில்லை. உடனே உபகாரியாய் மாறி, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று அவனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கி, வீரசிகரத்தில் வள்ளலாய் விளங்குகின்றான். வள்ளுவர் கண்ட உண்மையைச் சற்பாத்திரமாகிய சிறீராமனில் வைத்துப் புனைந்து சொல்லுவது ‘தகும் தகும்’ என்று ஒப்புக்கொள்ளுகின்றது புலமையுகம். அதனாலே கம்பர் சாதாரண கவிச்சக்கரவர்த்தியாயினார். கம்பர் தாமாக ஓர் உண்மையை காணாமலிருத்தல் கூடும். ஆனால், வள்ளுவர் உள்ளிட்ட மகான்கள் கண்ட உண்மையைப் பேணி வியந்து பயன்படுத்தியிருக்கின்றார். பேணிப் பயன் செய்த பெருமை கம்பருக்குண்டு.

மூலிகைகளைக் கண்ட சித்தர்கள் பெரியவர்கள். அம்மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்த படியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள்.

அவ்வாறே, திருவள்ளுவரும், சங்கத்துச் சான்றோர்களான புலவர்களும் பெரிய உண்மைகளைக் கண்ட மிகப்பெரியவர்கள். அவ்வுண்மைகளில் ஓரோவொன்றைப்பயன் படுத்துகின்ற கவிச்சக்கரவர்த்திகள் அடுத் படியில் நிற்கும் பெரியவர்கள்.

புலவர்களை அடுத்து கவிச்சக்கரவர்த்திகள்; அவர்களை அடுத்து சாதாரண கவிஞர்கள் இருக்கின்றார்கள். வள்ளுவர் கண்ட உண்மையைக் கம்பர் கண்டு வியந்து புனைந்தார். அந்த ஆற்றல் சாதாரண கவிஞர்களுக்கு இல்லாமல் இருக்கும். ஆனால், தமது அறிவின் எல்லைக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும் இயற்கை அழகுகளையும் சனங்களை வசீகரிக்கத்தக்க வகையிற் சொல்லுகின்ற ஒரு சாமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.

மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல
மாயப் பொடிபூசி நிற்குநிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ
கண்ணீ ருருக்குமோ ஆரறிவார்.

இது கவிஞர் ஒருவரின் கற்பனா சாமர்த்தியம். சூரியகாந்திப்பூ முகம் மலர்ந்து மஞ்சள் மகரந்தந் தோய்ந்து, சூரியன் செல்லுந் திக்கை நோக்கித் தவம் கிடக்கின்றது. இந்தக் கள்ளத் தவத்தைச் சூரியன் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டாற் சிரிக்குமோ! அழுமோ! ஆரறிவார்!!

வண்ணானில் மொழிகேட்டு வனம்விடுத்த சீதைதனை
இந்நாளுந் தேடுதல்போல் இருங்குரங்கு நெருங்கிடுமே.

இது மற்றொரு கற்பனை. அழகிகள் காட்டு வழியிற் சென்றால் அங்குள்ள குரங்குகள் நெருங்கி எட்டிப்பார்க்கின்றன. வாண்ணான் ஒருவனின் வார்த்தையை நம்பி, இந்த இராமன் சீதையைக் காடுகாட்டின கொடூரம், இன்னுங் குரங்குச் சந்ததிகளை வருத்திக்கொண்டிருக்கின்றது போலும்.

பள்ளு நாடகங்கள், குறவஞ்சிகள், எத்தனையோ வகையான நாட்டுப்பாடல்கள், பரணிகள் என்றிவைகள் சாதாரண கவிஞர்களின் கவிதா சாமர்த்தியங்கள். இவைகள் பெரிய இலட்சிய உண்மைகளைச் சாதியாமல் விட்டாலும், மனிதனுக்கு ஒருவகை களிப்பை ஊட்டி, நல்ல அமைதியான பண்பாட்டை வருவிக்கின்றன; அன்றி அவனை, பெரிய உண்மைகளை கொள்ளுதற்கேற்ற கொள்கலமும் ஆக்குகின்றன. சாதாரண கவிஞர்கள், முற்றத்தை அழகு செய்கின்ற பூந்தோட்டம் போன்றவர்கள். இவர்களும் ஒரு நாட்டின் அழகுச் செல்வங்களே.

கவிஞர்களுக்கு மேலே கவிச்சக்கரவர்த்திகள், அவர்களுக்கு மேலே சான்றோர்களான புலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை பிளாற்றோ நிந்திக்கவும் இல்லை; நாடுகடத்தவும் இல்லை. பிளேற்றோ சீறிப்பாய்கின்ற கவிஞர்கள், மேலே காட்டப்பட்ட முத்திறத்தவர்களும் அல்லாதவர்கள். அவர்கள் கவிதை வெறியர்கள். பாடாமல் இருக்கமாட்டாதவர்கள். பாடுகின்ற பைத்தியம் உள்ளவர்கள். பாவம்! அவர்கள் நன்றாகப் பாடலாம். அவர்களை யாருந் தடை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குச் சனநாயக உலகத்தில் பெரிய செல்வாக்கும் இருக்கின்றது. அவர்கள் ஓயாமற் பாடலாம். ஆனால், அவர்கள் தயைகூர்ந்து தம்மறிவின் எல்லையுள் அடங்கி நின்று பாடுதல் வேண்டும்; ஒரு பட்சியைப் பாடலாம்; மரஞ்செடிகளைப் பாடலாம்; காலைமாலைகளை வருணிக்கலாம். கடற்கரை குளக்கரை மற்றும் சோலைகள் மலைகள் யாவற்றையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். பிளேற்றோ தடுக்க மாட்டார். ஆனால் கவிதை வெறியர்கள் அவ்வளவில் அடங்குவார்களா? தங்கள் தலைக்கு அப்பாற்பட்ட விடயம், தலைக்குள் அடங்கின விடயம் என்ற பேதம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லாம் அபேதமே. கடவுள், வண்ணத்துப்பூச்சி, காதல், சமயம், தத்துவம், அரசியல் முதலிய எல்லாவற்றையும் அவர்கள் பாடிவிடுவார்கள். பாமர சனங்கள் கூடுமிடம் அவர்களுக்கு கவியரங்கமாயிருக்கும். சனநாயக அரசியலின் வேரை அசைத்து விடுவார்கள் அவர்கள். அதுதான் பிளேற்றோவுக்கு கோபம். ஒரு பொறுப்புள்ள சிறிய உத்தியோகத்தைக் கூட ஒரு நிமிட நேரம் வகிக்க முடியாத கவிதைவெறியர்கள் அரசாங்கத்துக்கு கவிதை பாடுகின்றார்களே. அவர்களை நாடுகடத்தாமல் என்ன செய்வது? என்கின்றார் பிளேற்றோ. பிளேற்றோவில் என்ன குற்றம்?

பாட்டுப் பாடுகின்றவர்கள் இன்னும் ஒரு பகுதியார் இருக்கின்றார்கள். அவர்கள் கடிய கொடிய வித்துவான்கள். அவர்களுடைய கருத்தை பிளேற்றோ மதிப்பார். ஆனாற் கருத்து புலப்படுவதில்லை. சிறிது நாட்பட்டால், பாடிய அவர்களுக்கே கருத்து கலங்கிப்போகின்றது. இப்படிப்பட்ட பாடல்களை அச்சிட்டு பரப்பாமல் இருப்பது புண்ணியம். வித்துவான்கள் தங்கள் கருத்துக்களை வசனநடையிற் சொல்லிவிடலாமே என்று கவிதா சாமர்த்தியம் வாய்ந்தவரான மகாலிங்கசிவம் அடிக்கடி சொல்லுவதுண்டு. கவித்துவம் அற்ற கவிதைகளைக் காணக் கேட்க அவரால் முடிவதில்லை; கூசுவார்.

இப்பொழுது வித்துவத்திறமை, கவித்துவம் இரண்டும் சூனியமான மற்றொரு பகுதியாரும் பாட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுக்குப் பணப்பஞ்சத்திலும் சொற்பஞ்சம் மகாமோசம்.

பச்சைக்குழந்தைகளின் செவியையும் நாவையும் அந்த சொற்பஞ்ச பாடல்கள் – ஓசை கெட்ட பாடல்கள் – கெடுத்தே விடும். சொல்லுஞ் சொல்லும் பொருந்தும் பொருத்து, பாலும் பாலும் பொருந்தும் பொருத்தாயிருக்க வேண்டும். ஓசையைப் பாட்டிற் கட்டக்கூடாது. பாட்டிலிருந்து ஓசை வரவேண்டும். “இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்” என்ற திருப்புகழை எடுத்துப்பார்க்க மேற்காட்டிய இரண்டும் புலனாகும். இரண்டுங்கெட்ட பாடல்களைப் பாடாமலிருக்க வேண்டுமென்று அரசாங்கம் கடுஞ்சட்டம் விதிக்க வேண்டும்.

ஆறு பகுதியான பாட்டுக்காரர்கள் இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கின்றார்கள். ஆறாவது பகுதியினர் வெகு மோசமானவர்கள். ஐந்தாவது பகுதியினர் கவித்துவம் இல்லாதவர்கள். நாலவது பகுதியினர் மகாவித்துவ சாமர்த்தியம் உள்ளவர்கள்; ஆனால் நாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள். மற்றையோர் படிப்படியே உயர்ந்தவர்கள். சங்கத்துச் சான்றோர்கள் “பொய்யடிமையில்லாத புலவர்கள்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாராட்டப்பட்டிருக்கின்றார்கள்.

Read More..
ஈழத்து இலக்கிய வழி 12 comments

இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.

தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன.

நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும்
கூறுவர்.

இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார்.

இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.

வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.

அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.

அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரைய

Read More..
இரு கவிராயர் 2 comments

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இலக்கிய வழி எனும் நூலில் (திருத்தப்பதிப்பு – 1964) இருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல்களை ருசித்துப்பாருங்கள்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வேட்டைத்திருவிழாவினை பற்றி முத்துக்குமார கவிராயர் பாடிய இந்த பாடலை பாருங்கள்.

முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
தடைவி டாதனை யென்றுப லாலிகண்
சார வந்தனள் ஓரிள வாலையே

இதே போல நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் பற்றி சேனாதிராய கவிராயர் பாடுவதை பாருங்கள்

திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.

இப்பாடல்களின் பொருளை பிறிதொரு பதிவில் தருகிறேன்.

Read More..