நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.
சில படங்கள் உங்களுக்காக.








இண்டைக்கு கார்த்திகைத்தீபம். வழமையா யாழ்ப்பாணமே வெளிச்சக்காடாகிற ஒரு நிகழ்வு கார்த்திகைத்தீபம்தான். வழமையா வருசம் நிறைய வாற விசேடங்களுக்குள்ளேயே இண்டைவரைக்கும் எனக்கு பிடிச்சது கார்த்திகைதீபம்தான். ஏனென்ண்டா அண்டைக்குத்தான் இரவில வெளியால திரியலாம். வழமையான இரவு ஏழு மணிக்கு முதல் வீட்டுக்க வரவேணும் எண்டா அண்டைக்கு மட்டும் ஒம்பது மணி வரைக்கும் வரத்தேவையில்லை. (2002 வரைக்கும் கூடப்படிக்கிற பொம்பிளைப்பிள்ளையள் வீடுகளுக்கு எல்லாம் கூட்டமாய் போய் எங்கட வீர சாகசங்களை காட்டுறது, சில பிரச்சனை தந்த வாத்தியார் வீட்டு தீபத்துக்குள்ள உப்புபோடுறது வரைக்கும் செய்தனாங்கள், 2003க்கு பிறகு இந்த விளையாட்டுகள் ஒண்டும் இல்லை. – என்ன மாயா ஞாபகம் இருக்குதோ???) ஆனா கடைசியா 2005 இல யாழ்ப்பாணத்தை மோட்டச்சைக்கிளில ஒரு சுத்து சுத்தினதுதான் அதுக்கு பிறகு ஒண்டும் இல்லை.
2006 இல சரியான பிரச்சனை. பெரிசா ஒரு சனமும் தீபம் ஏத்தேல்ல. அத்தோட பஞ்சாங்க குழப்பம் வேற. கார்த்திகை தீபம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட பிரச்சனையிலயே கொஞ்ச இடத்தை முதல்நாளும் வேற கொஞ்ச இடத்தை அடுத்தநாளும் தீபம் ஏத்துப்பட்டுது. அனேகமா எல்லாரும் வீட்டு படலைக்குள்ளயே தீபம் வச்சு ஏத்தினதில பெரிசா வீதிகள் ஒண்டும் களைகட்டேல்ல. இருந்தாலும் கோயில்களில பூசைகள் நடந்தது.
இந்தவருசம் பஞ்சாங்க குழப்பம் ஒண்டும் இல்லை. 9 மணிக்கு ஊரடங்கு எண்டாலும் 7 மணிக்கு பிறகு றோட்டில ஆக்கள் காணுறது கஸ்டம். ஒரு நாலுபேரா சேந்து ஒரு சுத்து சுத்துவம் எண்டு வெளிக்கிட்டு சுத்தி பாத்தம் (ஆறேகாலுக்கு வீட்ட திரும்பி வந்திட்டம்). சனம் ஐஞ்சு மணிக்கே ஏத்த ரெடி. வழமையா ரோட்டு நீட்டுக்கு பாக்க வடிவா இருக்கும். இந்த முறை அங்கயொண்டு இங்கயொண்டு எண்டு எரிஞ்சுது. டக்கெண்டு எத்தனை இருக்கு எண்டு எண்ணி சொல்லிப்போடலாம் எண்டளவுக்கு இருந்துது. பிறவுண்றோட், கஸ்தூரியார் றோட், கேகேஸ் றோட், அரசடி றோட் எல்லா றோட்டும் நீட்டுக்கு போய் பாத்தன். ஒரு நல்ல படம் எடுப்பம் எண்டு பாத்தா சரிவரவே இல்ல. கடைசியா கோயிலடியில வந்து எடுத்தபடம் கீழ. (கறண்ட் இல்லாததில படம் நல்லா இல்ல – இப்ப இரவில கொஞ்ச நேரம் கறண்டும் இல்ல)

வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.
“நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே” என்று சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் பாடிய; செய்யுள் வடிவிலிருந்த தமிழிலக்கியத்தினை கற்றோரும் மற்றோரும் உணரும்படி செந்தமிழ் உரைநடை வடிவிற்கு மாற்றி தமிழிற்கு பரோபகாரம் செய்த நல்லை நகர் ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்றாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டிலே பிறப்பெடுத்த தமிழ் உரைநடை இலக்கியத்தை விருத்திசெய்து, பொதுமக்கள் எல்லோருக்கும் புலப்படக்கூடிய ஒரு உரைநடையினை உருவாக்கி அதன் மூலம் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் ஆறுமுக நாவலர் அவர்கள். ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று பாராட்டப்பட்ட ஆறுமுக நாவலர் அவர்கள் தனி ஒருவராய் தமிழ் உரைநடைக்கு செய்த பரோபகாரம் என்றும் நினைவில் கொள்ளப்படவேண்டியது. இவருடைய சைவவினாவிடைகள் இன்றுவரை சைவச்சிறார்களுக்கும் பெரியோருக்கும் வேதங்களாய் நின்று விளங்குகின்றன.
இவர் எழுதிய உரைநடை நூல்களுள்ளே குறிப்பிடத்தக்கவை பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கோயிற்புராண உரை முதலியன. இவர் இயற்றிய கண்டன நூல்கள் சுப்பிரபோதம், வச்சிரதண்டம் முதலியன. இவைதவிர சைவசமயத்தின் சிறப்புக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கமாக எழுதிய யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப்பற்றி எழுதிய கட்டுரை என்பனவும் இவரின் உரைநடைச் சிறப்பை எடுத்தியம்பிய வண்ணம் உள்ளவை.
இன்று நாவலர் பெருமானுடைய குருபூசை நல்லூர் கந்தசுவாமி கோயிலிலே விசேட பூசை வழிபாடுகளுடன் வெகு சிறப்பாக விமர்சையாக நடைபெற்றது.
சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கக்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானார் தந்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது
மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம்.
– சிறீல சிறீ ஆறுமுக நாவலர்.
ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.
நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.
தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.
கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.