கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்

ஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.

நீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.

குறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.

குறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.

நீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.

நீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.

வெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.

நீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க…

23 கார்த்திகை, 2006

வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

22 கார்த்திகை, 2006

கதிரைச் சிலேடை வெண்பா 17-20

நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங்
கற்பங் கடக்குங் கதிரையே – வெற்பரிந்தோன்
தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை (18)

வெற்பு அரிந்தோன் – மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த – மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை – பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் – நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே – தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் – திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே – தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.

மாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே – சேலேவை
மாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ
மாமடுவை வேலை மலை. (19)

சேல் ஏவை மாமடுவை வேலை மலை – சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் – மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை – மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்திய தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு – மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே – சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் – அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே – ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.

துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே – செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு (20)

கண்டு அடக்குஞ் செப்புமொழி – கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி – அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் – இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் – எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு – உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை – பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை – கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே – துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.

21 கார்த்திகை, 2006