Posts Tagged "யாழ்ப்பாணம்"

யாழ்ப்பாண சாதி அமைப்பு.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.

1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.

வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.

ஆனால் இதிலே

மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை

ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.

இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.

ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.

ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.

ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.

24 ஆனி, 2008

இந்துக்களின் யுத்தம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும்

விபரங்களுக்கு

Score card க்கு

30 பங்குனி, 2008

யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்



என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து வருமா?? அல்லது வராமல் விட்டிடுமோ?? வரவேணும்.

கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், சிறுகதைகள், நூல் அறிமுகம், கலைஇலக்கிய நிகழ்வுகள் எண்டு எல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கு.

புதுப்புனல் என்கிற பகுதியூடாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மிகச்சிறப்பாய் உள்ளது. இது மேலும் பலரை எழுதவும் வாசிக்கவும் வைக்கும்.

எழுத்துருக்களை பயன்படுத்துதலில இன்னும் சிறிய கவனம் வேண்டும் எண்டுறது என்ர எண்ணம். த. ஜெயசீலன் எழுதிய இரண்டு கவிதைகளையுமே வாசிக்க முடியேல்ல. என்னைப்பொறுத்தவரை எழுத்துரு அவ்வளவு மோசமா இருக்கு.

முதல் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதின “இன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு”. சிவத்தம்பி ஐயா கட்டுரையை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம் அவ்வளவு ஆங்கில சொல்லுகள் அடைப்புக்குறிகளுக்குள்ள. புகையிரத அமைச்சு ரெயில்வே எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட வேண்டிய தேவை எனக்கு விளங்கேல்ல. மற்றபடி இதை இன்னமும் விரிவா எழுதியிருந்தா எனக்கு இன்னமும் விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.

தாட்சாயணியின் கெடுபிடி சிறுகதையும், கொற்றை பி. கிருஸ்ணானந்தன் உடைய வல்லைவெளி கவிதையும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற கொன்வே பற்றி சொல்லுகின்றன.

நோயின் கொடுமையினால்
நொந்தவர் மயங்கிவிழ
“கொன்வோய்” போய்முடியத்
தொண்ணூறு நிமிடங்கள்
ஆவி பிரிந்ததனால்
“அங்கிருந்து” அனுப்பப்படும்
பூதவுடல்களும்
பொறுமைதனையிழந்து
கண்ணைத்;திறந்து
காரணத்தை கேட்கின்ற
அதிசயங்கள் நடந்தாலும்
ஆச்சரியமில்லை

என்கிறார் கிருஸ்ணானந்தன்.

பேராசிரியர் சபா. ஜெயராசா எழுதியிருக்கும் “நவீன கலை இலக்கியப்புலப்பாடுகள்” எண்ட கட்டுரையை இன்னொருக்கா வாச்சா என்ன சொல்லுறார் எண்டு விழங்கும் எண்டு நினைக்கிறன்.

க. திலகநாதன் தன் நாட்டிய சாத்திரம் – சில அரங்கக்குறிப்புகள் என்கிற கட்டுரையில அரங்க முறைமைகள் பற்றி விளக்குகிறார். நாட்டிய சாத்திரத்தில 6000 சூத்திரம் இருக்குதாம். அப்படியா???

அரண் கதை மூலம் அ. தனஞ்செயன் என்ன சொல்ல வாறார் எண்டு விளங்கேல்ல.

நூல் அறிமுகப்பகுதியில ஊடறு வெளியீடாக வந்த “இசை பிழியப்பட்ட வீணை” கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி நிச்சயமாக எனக்கு பயனுள்ள பகுதியாக இருக்கும். புத்தகங்களை தேடிக்கண்டுபிடிக்கிற வேலை குறையும்.

குப்பிளான் ஐ. சண்முகம் தனது பலதும் பாராட்டும் பத்தி பகுதியல நுண்கலைத்துறையின் கண்காட்சி பற்றி எழுதியிருக்கிறார். அதில் அவர்களுக்கு மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு இன்னமும் இல்லை என்று எழுதியிருக்கின்றார். அதற்கு கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளை உதாரணத்துக்கு இழுக்கின்றார். மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறுவதாயின் அதன் கருப்பொருள் நிச்சயமாக ஓவியர்களை தூண்டுவதாக இருக்கவேண்டும். அப்படியான கருப்பொருள்களை நினைப்பதே தடையாயிருக்க எங்கிருந்து வரும் ஓவியம் என்பதை அவர் எண்ணத் தவறிவிட்டார். இந்த கண்காட்சியை நான் பார்ப்பதற்கு சில நாட்களின் முன்னர் ஒரு ஓவியக் கண்காட்சியை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதனை விட இந்த கண்காட்சி பலமடங்கு சிறந்ததாக இருந்தது என்பது என் எண்ணம்.

25 தை, 2008